Description
1. அன்பில் ஒரு டீஸ்பூன் கூடிவிட்டது
இரண்டுவிதமான வெளிப்பாடுகள்கொண்ட கவிதைகள் இத்தொகுப்பில்
அமைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவதாக, தன்னிலையின் இருத்தல் சார்ந்த
நெருக்கடிகளைப்பேசும் கவிதைகள். ‘ நான் ஏன் இவ்வளவு தனியாக இருக்கிறேன்?’ என்ற
மிகப்பழைய கேள்வியிலிருந்து பிறக்கும் கவிதைகள். இன்னொன்று ‘நீ ஏன் இப்படி
செய்தாய்?’ என இடையறாது முறையிடும் கவிதைகள். இரண்டுமே ஒரு நாணயத்தின்
இரண்டு பக்கங்கள்தான். இட்டு நிரப்பமுடியாத இந்த எல்லையற்ற பெருந்தனிமையை
இன்னொருவரைக் கொண்டு கணப்பொழுதேனும் நிரப்பிவிடலாம் என்ற நம்பிக்கை.
நம்பிக்கை கூட அல்ல, ஒரு பிரமை. இந்தப் பிரார்த்தனைகள் யாரை நோக்கியவை
என்றுகூட நிச்சயிக்க முடியவில்லை. அவர்கள் இருப்பவர்களா, ஒருபோதும் இந்தப்
பிரபஞ்சத்தில் இருந்திராதவர்களா ?
2. அலெக்ஸா… நீ என்னைக் காதலிக்கிறாயா?
நாம் வாழுகிற காலத்தின் காட்சிகளும் கோலங்களும் இதுவரை மனிதகுலம் கண்டிராதது.
இயந்திரங்கள் மனிதர்களைப்போலவும் மனிதர்கள் இயந்திரங்களைப்போலவும் செயல்படும்
ஒரு காலத்தின் விசித்திரங்களையும் புதிர்களையும் இக்கவிதைகள் தீண்டுகின்றன. அதீத
தொழில்நுட்ப வயப்பட்ட உலகில் புறம் என்பது இயற்கை காட்சிகள் அல்ல, நம்மைக்
கட்டுப்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத அதிகார வலைப்பின்னல். அதுவே அரசியலாகவும்
அந்தரங்கமாகவும் இருக்கின்றன. அதன் சாட்சியங்களே இக்கவிதைகள்.
3. வசந்தம் வராத வருடம்
கொரோனாவின் வருகை ஒரு சுனாமி அலையைப்போன்று எங்கோ தொலைவில் கடலில் ஒரு மெல்லிய நீலக்கோடாக முதலில் எழுந்தது. அது வான் நோக்கி உயர்ந்து உயர்ந்து அந்த நீலச் சுவர் கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் இருக்கும் கரை நோக்கி வந்துவிட்டது. நம் வாழ்வை முழுமையாக எடுத்துக்கொண்டது. நமது காலடியில் நமது நிலங்கள் அப்போது நகர்ந்துகொண்டிருந்தன. இந்தக் கவிதைகளில் இந்தக் காலத்தின் பேய்க்கனவுகளை கொரோனாவின் முதல் புள்ளியிலிருந்து இந்த லாக்டவுன் காலத்தளர்வுகள் வரை விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது என்பது ஒரு கற்பிதம் மட்டுமே. நாம் அவ்வளவு எளிதில் திரும்பமுடியாத இந்த இருள்வழியில் எங்கோ திகைத்து நின்றுகொண்டிருக்கிறோம்.
Reviews
There are no reviews yet.