படைவீடு

இன்றைய சமூக சீர்கேட்டுக்கெல்லாம் எதோ ஓர் இடத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டிருக்க வேண்டும். இந்த நாவல் அதைத் தேடிய பயணம்தான். 14 ஆம் நூற்றாண்டில் தமிழ் பேரரசுக்கு சமயம், பண்பாடு இரண்டிலும் ஒரு நெருக்குதல் ஏற்பட்டது. மதுரையை ஆண்ட சுல்தானியர்களும் விஜயநகரத்தை ஆண்ட ஹரிகர புக்கர் அரசும் உண்டாக்கிய நெருக்கடியின் வலி இன்றும் தொடர்கிறது. விமர்சனக் களம் கொண்ட இந்த நாவலும் விமர்சனத்துக்குத் தப்பாது என்பது கண்கூடு. சமயம், சாதி தொடர்பான பல கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சியாகவும் இந்த நாவலைப் படைத்திருக்கிறார் தமிழ்மகன்.

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்

குஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்து பொறித்த ஒரு நங்கூரம் கிடைத்தது… இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையது அது. ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் இன்றும் இருக்கிற கொற்கை, குறிஞ்சி என்ற கிராமங்கள் ஆச்சர்யப்படுத்தின. சிந்துவெளியில் கண்டுடெடுத்த எழுத்துக்களும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கண்டெடுத்த எழுத்துக்களும் ஒன்றுபோல இருப்பது ஏன்? இடைப்பட்ட மூவாயிரம் கிலோ மீட்டர்களும் மூவாயிரம் ஆண்டுகளும் என்ன ரகசியத்தைச் சுமந்து நிற்கின்றன? தென்கோடி தமிழ் நாட்டில் இருந்து மெசபடோமியா – கிரேக்கம் என நடந்த வர்த்தகம் என்ன சேதியைச் சொல்கிறது?… நினைவிலே தமிழ் உள்ள மிருகமாக நாம் இருக்கிறோம். ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவல் அதைத்தான் பேசுகிறது. ரூ.150

வனசாட்சி

இலங்கையின் மலைகளில் தேயிலைத் தோட்டத்தை உருவாக்கி அதற்கு எருவாகிப்போன தமிழ் மக்களின் கதை. ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்துக்குப் பிறகு அவர்களில் பாதி பேர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ரத்தம் கொதிக்கவைக்கும் அந்த தியாகச் சரித்திரத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட நாவல். மலையிலும் கடலிலும் மறைந்துபோன அந்த தமிழர் உழைப்பை புனைவின் ஊடே பதிவு செய்திருக்கிறது இந்த நாவல். ரூ.260/-

தாரகை

தமிழ் அரசியலில் சூழலில் சினிமா ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. நடிகர்கள் இல்லாமல் கடந்த அரை நூற்றாண்டாக தமிழக அரசியல் இல்லை. ஓரிரு படங்கள் ஓடிவிட்டாலே நடிகர்கள் தங்களை தமிழகத்தை ஆளும் தகுதி வந்துவிட்டதாக நினைக்கிறார்கள். தாரகை நாவலில் நாயகி தீபிகாவும் தமிழக அரசியல் கட்சி ஒன்றின் தலைவி ஆகிறாள். யாருமற்ற அனாதையாக தமிழ் சினிமா உலகில் அடி எடுத்துவைத்து, பாதையில் பயணத்து, அவள் அடையும் இடம்… வெற்றிடமா? வெற்றி மகுடமா? ரூ. 165/-

மீன்மலர்

கடவுள், இசை, காமம் என எல்லாவற்றையுமே விவாதத்துக்குள்ளாக்கும் வித்தியாசமான சிறுகதைகளின் தொகுப்பு. மீனையும் மலரையும் ஒப்புமைப்படுத்தும் சிறுகதை ஒரு தத்துவவாதத்தை சிறுகதையினூடே சிறப்பாகச் செய்திருக்கிறது. மனக்குகை ஓவியம் சிறுகதை, மனித வாழ்வின் உளவியல் சிக்கலை முன்வைக்கிறது. மனம் என அமையப் பெற்ற உயிரினமான மனிதனுக்கான சிக்கலை விவரிக்கும் கதை அது. ஆர்ப்பாட்டங்கள் இல்லாத நீரோடை போன்ற நடையில் இவற்றை வாசிப்பது பேரனுபவம். ரூ. 85/-

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

சிறுகதை உலகில் தடம் பதித்த நூல். ஆனந்த விகடன், கல்கி மற்றும் இணைய இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு. வித விதமான மனிதர்களை அடையாளம் காட்டும் அற்புதமான சிறுகதைகள். இறந்து போனதாக டாக்டர்களே கைவிட்டுவிட்ட ஒருவனின் மரணப் போராட்டத்தைச் சொல்லும் நினைவின் நிழல், பாம்புகளை நேசிக்கும் ஒரு வினோத மனிதனின் செயல்களுக்கு ஒளிந்திருக்கும் உண்மைக் காரணத்தைச் சொல்லும் இது பாம்புக் கதை அல்ல… என வாசிப்புச் சுவையுடன் வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.   ரூ. 185/-

வெட்டுப்புலி அல்ல – வெட்டும் புலி

 விமர்சனம்: எழுத்தாளர் இமையம் சின்னா ரெட்டி என்பவர் தனியாளாக சிறுத்தையை வெட்டி வீழ்த்தியதையும், அச்சம்பவம் எப்படி ஒரு தீப்பெட்டியின் அட்டைப்படமாக மாறியது என்பதையும் அறிந்து கொள்வதற்காக தமிழ்ச் செல்வனும், அவனுடைய நண்பர்கள் பிரபாஷும், பிரானான்டசும் போகிறார்கள். சின்னா ரெட்டி தமிழ்ச்செல்வனின் தாத்தாவினுடைய பெரியப்பா, சிறுத்தையை வெட்டிய கதையை ஆராயப்போனவர்களுக்கு தமிழ்ச்சமூகத்தின் ஒரு நூற்றாண்டுகால வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் பல்வேறு மனிதர்களால். அதுவும் நினைவோட்டமாக. சிறுத்தையை வெட்டிய சின்னா ரெட்டி, அவருடைய குடும்பம், உடன் பிறந்தவர்கள், அவர்களுடைய வாரிசுகள், அவர்களுக்கடுத்த வாரிசுகள் என்று வளர்ந்து நான்காவது தலைமுறையைச் சார்ந்த தமிழ்ச்செல்வனின் வழியாக–அவனுடைய பயணத்தின் வழியே நாவல் வளர்கிறது. நான்கு தலைமுறையை சார்ந்த மனிதர்கள் நாவலுக்குள் வருகிறார்கள். தமிழ்ச்செல்வன் தன் பயணத்தை தொடங்குகிறான். அது ஒருமாதகாலம்தான். ஆனால் நாவல் 1910-2009 வரையிலான கால மாற்றங்களையும், அடையாள மாற்றங்களையும் விவரிக்கிறது. நாவலின் பாத்திரங்களாக சின்னா ரெட்டி, தசரத ரெட்டி, பொன்னுசாமி ரெட்டி, லட்சுமண ரெட்டி, ஆறுமுக முதலி, முத்தம்மா, மங்கம்மா, நாகம்மா, கண்ணம்மா, விசாலாட்சி, நடேசன், புனிதா, குணவதி, தியாகராசன், சிவகுரு, ஹேமலதா, கிருஷ்ணபிரியா, நடராஜன், கணேசன், ஜேம்ஸ் என்று பலர் இருந்தாலும் இவர்கள் நாவலின் முக்கியமான பாத்திரங்கள் அல்ல. தமிழ்ச்சமூகத்தின் ஒரு நூற்றாண்டுகால வாழ்வை அறிந்துகொள்வதற்கு இவர்கள் வழிகாட்டிகளாக, கருவிகளாக மட்டுமே இருக்கிறார்கள். நாவலின் முக்கிய பாத்திரங்களாக இருப்பது சமூகத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகள், பொருளாதார வளர்ச்சிகள், சினிமா, தொழில் வளர்ச்சிகள்தான். வறுமை, சாதிய கொடுமைகள், உழைப்பு, சுரண்டல்கள், கிராமங்கள் நகரமாவது, பிரிட்டிஷ் அரசு வெளியேறுவது, இந்தியா சுதந்திரமடைவது, பிரிட்டிஸ் ஆட்சியாளர்களை வெளியேற்ற முனைகிற அதே அளவுக்கு அவர்களுடைய பழக்க வழக்கங்களை, மொழியை தங்களுடையதாக மாற்றிக்கொள்ள துடிக்கிற துடிப்பு முக்கியமானது. கிராமங்கள் நீர்த்தேக்கங்களாக மாறுவது, பம்புசெட் வருவது, மின்சாரம் வருவது, தார்சாலை, சினிமா, பத்திரிகை, வருதல், காண்டராக்டர்கள் எம்.எல்.ஏ ஆவது. புதுபுது ஊழல்கள்,சிகரட் குடித்தல், டீகுடித்தல், ரயில், பஸ், லாரி வருதல், பிரமாண்டமான கட்டிடங்கள், ஜவுளிக்கடைகள், ஊசிபோடுவது,…

செல்லுலாய்ட் சித்திரங்கள்

தமிழ்மகன் 90-களின் சினிமா பிரபலங்கள் குறித்த சுவையான சம்பவங்களின் தொகுப்பு. ஆசிரியருக்கும் சினிமா பிரபலத்துக்குமான நேரடியான அனுபவம் நேர்மையான சான்றாக இருக்கிறது. ரூ.100/-

மானுடப் பண்ணை

தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பாகத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சினைகள் கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன. தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லடக்கணக்கான இளைஞர்களின் ‘சோக’ வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால். தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளன்குகிறது. ரூ.160/- உயிர்மை பதிப்பகம்