நாளை மற்றொரு நாளல்ல

சுப்ரபாரதி மணியன் இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர் சுப்ரபாரதிமணியன். விழாக்களைக் குறித்தும் அதில் பங்குபெற்ற திரைப்படங்கள் குறித்தும் விரிவாக அலசுகிறார் இந்த நூலில். உலக அரசியல் திரைப்படங்கள் குறித்தும் விளிம்பு நிலை மனிதர்களின் திரைப்படங்கள் குறித்தும் அதிகம் பேசப்படாத குறும்படங்கள் குறித்துமான அவரது நுண்மையான பார்வையை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்த நூல். ரூ.50/-

அயல் சினிமா

எஸ். ராமகிருஷ்ணன் உலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்த நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா எனப் பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கியத் திரைப்படங்களையும் ஆராய்கிறது. சினிமா வெறும் நுகர்பொருள் என்பதைத் தாண்டி கலாச்சாரம் மற்றும் சமூக அரசியல் மாற்றங்களை நுட்பமாகப் பதிவுசெய்யும் வடிவமாகத் தன்னை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதையே இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன. சமகால உலக சினிமாவைப் புரிந்து கொள்ளவும் தமிழ் சினிமாவில் புதிய மாற்றங்களை உருவாக்கவும் விரும்பும் அனைவருக்கும் மிக நெருக்கமானது இந்த நூல். ரூ.100/-

பார்வை 360

சுஜாதா சுஜாதா எழுத்தாளராகத் திரையுலகில் எதிர்கொண்ட அனுபவங்கள், சம்பவங்களை விவரிக்கிறது இந்த நூல். இலக்கியம் சினிமாவாகும்போது நிகழும் விசித்திரங்கள், புகழ்பெற்ற சினிமாக் கலைஞர்களுடன் பணியாற்றிய நினைவுகள், தமிழ் சினிமா உலகின் எதார்த்தமான பின்புலங்கள் குறித்த இந்த நூல் கனவுத் தொழிற்சாலையின் இன்னொரு பக்கத்தை சுவாரசியமாக விவரிக்கிறது. ரூ.50/-

சினிமா: அலைந்துதிரிபவனின் அழகியல்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிமாவின் மாறுபட்ட அழகியல் அரசியல் பின்னணியில் தமிழ் சினிமாவின் மந்தத் தன்மையைக் கடுமையாகச் சாடும் சாருநிவேதிதா, தமிழ் சினிமாவில் செய்யப்படும் புதிய முயற்சிகளை இக்கட்டுரைகளில் உற்சாகமுடன் வரவேற்கவும் செய்கிறார். பரவலாக அங்கீகரிக்கப்பட்ட படங்கள், இயக்குனர்களைக் காட்டிலும் மாற்று சினிமா மொழியை உக்கிரமாகக் கையாண்ட கத்ரீன் ப்ரேலா, ஒட்டிஞ்ஜர், பசோலினி, ஹொடரோவ்ஸ்கி போன்றவர்களே சாருவின் அக்கறைக்குரியவர்களாக இருக்கிறார்கள். சினிமா குறித்த ஆழமான விவாதங்களைத் தூண்டும் நூல் இது ரூ.170/-

எம்.ஆர்.ராதா காலத்தின் கலைஞன்

மணா எம். ஆர். ராதா நூற்றாண்டை முன்னிட்டு வெளிவரும் இந்நூல் நம் காலத்தின் மாபெரும் எதிர்க்குரலாக விளங்கிய கலைஞனின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது. திராவிட இயக்கத்தின் அரசியல் பண்பாட்டுக் கருத்தியல்களை தனது மேடை நாடகங்கள் மற்றும் சினிமா மூலம் தீவிரமாகக் கொண்டு சென்ற எம். ஆர். ராதாவின் ஆளுமை பழமையையும் அறியாமையையும் எதிர்த்து நவீனத்துவத்தின் கலக சக்தியாக வெளிப்பட்டது. மணாவின் இந்த நூல் எம். ஆர். ராதாவின் வாழ்வையும் கலையையும் ஆதாரபூர்வமான தகவல்கள், அரிய புகைப்படங்கள், ராதாவிற்கு நெருக்கமானவர்களின் நேர்காணல்கள் என அவரது பயணத்தின் ஏற்ற இறக்கங்களை விரிந்த பார்வையுடன் முன்வைக்கிறது. ரூ.170/-

திரைப்படக் கலை

முனைவர்.வெ.மு.ஷாஜகான் கனி திரைப்படம்… உலகில் தோன்றிய படிப்படியான வரலாறு இந்நூலில் படங்களோடு விளக்கப்பட்டுள்ளது.படப்பிடிப்புத் தொழில்நுட்பங்களின் பல்வேறு நிலைகளை எளிமையாக விளக்கியுள்ள பாங்கு, திரையுலகில் கால்பதிக்க நினைக்கும் புதியவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். கட்டமிடுதல், கோணம், ஒளியமைப்பு, ஒருங்கமைப்பு, கேமரா நகர்வுகள்… இவற்றிற்கு ஒரு பொது இலக்கணமாக இந்நூலாசிரியர் கூறும் ‘ஒருவரி விதி’ வியந்து ஏற்கத்தக்கது! தந்திரக் காட்சிகள், திரைமொழி, திரைப்பட உத்திகள் முதலியவற்றைப் படச்சான்றுகளுடன் இந்நூல் தருவது, எளிய புரிதலுக்கு உதவுகிறது. திரைக்கதை எழுதும் முன்பணியும் படத்தொகுப்பு என்னும் பின்பணியும் விளக்கப்பட்டுள்ள விதம் அருமை! ‘சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை’ என்ற இந்நூலாசிரியரின் முந்தைய நூலுக்குத் தமிழ் சினிமா இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள், சினிமாவை சுவாசக் காற்றாக நேசிக்கும் நான், என்னைப்போன்ற இன்னொருத்தரை உங்களில் பார்த்த மகிழ்வுடன்… என்று எழுதிய பாராட்டு வரிகளை இந்நூல் தக்கவைத்துள்ளது. ரூ.210/-

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள்

எஸ். ராமகிருஷ்ணன் இவை பதேர்பாஞ்சலி பற்றிய எனது மனப்பதிவுகள். இந்தக் குறிப்புகள் பல நேரங்களில் மனதில் தோன்றி மறைந்தவை. ஆய்வு பூர்வமாகவோ, கோட்பாட்டு அடிப்படையிலோ இவை அணுகப்படவில்லை. ஒரு எளிய சினிமா பார்வையாளன் என்ற ரீதியில் பதேர் பாஞ்சாலி எனக்குள் உருவாக்கிய விளைவுகளைத் தொகுத்திருக்கிறேன் என்றே சொல்லலாம். பதேர் பாஞ்சாலியைப் பற்றிய ரேயின் கருத்துகளை, அதன் உருவாக்கத்தைப் பற்றிய தகவல்களை, கட்டுரைகளை வாசிக்கத் துவங்கிய பிறகு அந்தப் படம் குறித்த அனுபவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்கியது. ஆகவே எனது வாசிப்பு அனுபவமும் இந்த நூலின் பகுதியாகவே இடம்பெற்றிருக்கிறது. ஒரு திரைப்படத்தை எப்படி அணுகுவது என்பதற்கான சில சாத்தியங்களை உருவாக்குவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். அதை நோக்கியே இந்தப் பதிவுகள் அமைந்திருக்கின்றன. பதேர் பாஞ்சாலி படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு உலகம் முழுவதும் சத்யஜித்ரே கௌரவிக்கப்பட்டார். அதை நினைவுகொள்ளும் விதமாகவும் ஒரு அரிய இந்திய சினிமாவைப் புரிந்து கொள்வதற்கான எனது எத்தனிப்பாகவும் இந்த நூலைக் கருதுகிறேன். ரூ.135/-

திரைக்கதை பயிற்சி புத்தகம்

சுஜாதா திரைக்கதை எழுத ஆரம்பிக்குமுன் சற்று நீண்ட ஒரு படிவத்தை நீங்கள் நிரப்பியாக வேண்டும். இதைத் திருப்திகரமாக முடித்தால்தான் உங்களுக்குத் திரையுலகில் அனுமதி கிடைக்கும். எளிய படிவம்தான். சில கேள்விகளுக்குப் பெரும்பாலும் ஒரு வார்த்தை விடைகள். இந்தப் படிவமே திரைக்கதையல்ல. அதற்கு முந்தைய எழுத்துThe writing before the writing. இந்தப் படிவத்தை நிரப்பிவிட்டால் திரைக்கதை எழுதுவது உங்களுக்கு எளிதாகிவிடும். அதைவிட முக்கியம் தொடர்ந்து திரைக்கதையாக எழுதலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கவும் இந்தப் படிவம் உதவும். இது திரைக்கதை மாணவர்களுக்குமட்டும் அல்ல, பல திரைப்படங்கள் எடுத்த இயக்குனர்களுக்கும் உதவும். இதை நிரப்பும்போது தயாரிப்பாளர்களுக்குப் படத்தைப் பற்றித் தெளிவான ஐடியா கிடைக்கும். சுஜாதா ‘திரைக்கதை எழுதுவது எப்படி’ என்னும் நூலைத் தொடர்ந்து எழுதியுள்ள இந்த நூல் திரைக்கதை எழுதிப் பார்ப்பதற்கு அத்தியாவசியமான ஆதார வடிவத்தை வழங்குகிறது. திரைக்கதைக் கலை, கருத்தாக்கம், பாத்திரப்படைப்பு, உறவுகள், கதை அமைப்பு, கதைச் சம்பவங்கள், கதா பாத்திர வரைபடம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலில் ஐந்து திரைக்கதைகளை எழுதிப் பார்ப்பதற்காக பயிற்சிப் படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சுஜாதாவின் வசீகரமான நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் திரைப்படக் கலை குறித்த மிகச் சிறந்த கையேடாகத் திகழ்கிறது. தமிழில் இத்தகைய ஒரு கையேடு வெளிவருவது இதுவே முதல் முறை. ரூ.130/-

எம் தமிழர் செய்த படம்

சு. தியடோர் பாஸ்கரன் தமிழ் சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, போக்கு ஆகியவற்றின் சில முக்கியப் பரிமாணங்கள் மீது கவனத்தைச் செலுத்த இந்தப் புத்தகம் நம்மைத் தூண்டுகிறது. அதிலும் தென்னிந்திய சினிமாவின் மௌன சகாப்தத்தைப் பற்றிய விவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்கின்றது. பிரித்தானிய அரசு தமிழ் சினிமாவை எதிர்கொண்ட விதம், திரைப்படத் தணிக்கை, ஆவணப்படங்கள் போன்ற பொருட்கள் பற்றி விரிவாக ஆராய்கின்றது. தமிழ் இலக்கியத்திற்கும் திரைக்கும் உள்ள உறவை உற்றுநோக்குகின்றது. தமிழ்ப்படங்களில் பாட்டின் இடம் என்ன, பாத்திரப் பேச்சின் தன்மைகள் ஒரு திரைப்படத்தின் வளத்தைச் சிதைக்கின்றனவா போன்ற சினிமா அழகியல் சார்ந்த கேள்விகளை எழுப்பித் தமிழ்த் திரை பற்றிய ஓர் ஆரோக்கியமான கரிசனத்தை ஏற்படுத்த இந்நூல் முயலுகின்றது ரூ.100/-

கமல் நம் காலத்து நாயகன்

மணா தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு மகத்தான கலைஞனைப் பற்றிய பதிவு இது. ஒரு கலாச்சாரத்தின் உணர்வுகளைத் தீவிரமாகத் தொட்டுத் தழுவி தனது பன்முகத்தன்மை கொண்ட படைப்பாற்றலால் யாராலும் நகல் எடுக்க முடியாத ஒரு தனித்துவமான அழகியலை உருவாக்கியவர் கமல்ஹாசன். மணாவின் கடும் உழைப்பினால் உருவான இந்த அரிய தொகுப்பில் கமல் நம்முடன் பேசுகிறார்கள். இது கமலின் சரித்திரம் அல்ல, கமலின் வழியே உருவான ஒரு கலையின் சரித்திரம். ரூ.350/-