பிறந்தநாள்- சிறுகதை

October 21, 2016

 

தமிழ்மகன்

சிந்து எனக்கு கேக் ஊட்டிய நேரத்தில் செல்போன் அடித்தது. மகனும், மகளும் இன்னமும் ‘ஹாப்பி பர்த் டே டாடி’ பாடிக் கொண்டிருந்தார்கள். கேக்கை விழுங்கிவிட்டு செல்போனை எடுக்கலாம் என நினைத்தேன் அதுதான் இமாலய தவறு.
செல்போனில் அழைத்தது எம்.டி. வாயைத் துடைத்துக்கொண்டு போனை எடுப்பதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. எம்.டி. தேவையில்லாமல் அழைக்க மாட்டார். மிக அவசரமான வேலையாக இருந்தால்தான் அழைப்பார். நாகரிகமாகத்தான் பேசுவார். ‘உன்னை ஏதும் டிஸ்டர்ப் பண்ணவில்லையே? ஒரு ஹெல்ப் வேணும்’ இப்படித்தான் பேசுவார். ஒருபோதும் எம்.டி. அழைத்து, எடுக்காமல் விட்டதில்லை. எதற்கு அழைத்தாரோ, என்ன அவசரமோ என வேகமாக மனதில் ஓட்டிப் பார்த்தேன். கேக் சாப்பிடுகிற ஆசையில் போனை எடுக்காமல் விட்டுவிட்டோமே? என்ன நினைப்பாரோ என்ற புதிய கேள்வியும் மனத்தில் உதித்தது. உப கேள்விகள் பிறந்து ஏகப்பட்ட கொக்கிகள் நியூரான் எங்கும் நிரம்பி, குப்பென்று வியர்த்தது.
உடனே அழைத்தேன். போன் எங்கேஜ்டாக இருந்தது. மறுபடி நம்மைத்தான் அழைத்துக் கொண்டிருக்கிறாரோ… அவருக்கும் எங்கேஜ்ட் டோன் வருமே… நாம் அலட்சியமாக வேறு யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதாக நினைத்துவிட்டால்… போனை அப்படியே வைத்துவிட்டுக் காத்திருந்தேன். வியர்வை அதிகமாகிக் கொண்டிருந்தது.
என் மனைவி சிந்து கிராமத்துப் பெண். என்னை சார்ந்தே யோசித்துப் பழக்கப்பட்டுப் போனவள். கணவனுடைய அதிர்ச்சியோ, பாமோ அவளை உடனடியாகப் பாதித்துவிடும். நான் பயப்படும் அளவுக்கு சற்று கூடுதலாகவே பயப்படுவாள். ‘ஊருக்கே போய்விடலாங்க’ என்கிற அளவுக்குப் போய்விடுவாள். ஆனால், நான் மகிழ்கிற அளவுக்கு மகிழ்கிற பழக்கம் அவளுக்கு இல்லை.
பெரியவனுக்கு அம்மா குணம்தான், அவனும் அப்பா மீண்டும் இயல்பு நிலைக்கு மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தான். சின்னவளுக்கு இன்னமும் யாருடைய குணம் என்பதை அத்தனை ‘சுகுராக’ வரையறுக்க முடியவில்லை.
ஒட்டு மொத்தக் குடும்பமும் இப்போது எம்.டி. எதற்காக அழைத்தார் என்ற குழப்பத்தில் இருந்தது. ‘‘ஏம்பா போன் பண்ணா எடுக்கமாட்டியா?” என கொஞ்சம் டோஸ்விட்டு விட்டு வைத்து விட்டாலும் போதும் என்றிருந்தது.
பேசாமல் காத்திருப்பதுதான் நல்லதென்று காத்திருந்தேன். மனைவியும் குழந்தைகளும் மகிழ்ச்சியான நேரத்தில் அப்பாவுக்கு இப்படி ஒரு சங்கடம் ஏற்பட்டு விட்டதே என ஸதம்பித்துப் பார்த்திருந்தனர். நான் எம்.டி. போனுக்கு எப்படி பயப்படுவேன் என அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
பத்து நிமிடங்கள் ஆகியும் அவரிடம் இருந்து பதில் வரவில்லை. பிறந்த நாளுக்கு விடுப்பு எடுத்திருந்தேன். காஞ்சிபுரம் கோயிலுக்கு போய் வருவதாக பிளான். கால்டாக்ஸிக்கும் சொல்லி ஆகிவிட்டது.
‘’ஒருவேளை அர்ஜென்ட் வேலையா ஆபீஸூக்கு வரச் சொல்லியிருப்பாரோ?” என குடும்பத்தாரின் ஆலோசனையைக் கேட்டேன்.
சிந்துவுக்கும் குழந்தைகளுக்கும் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
மறுபடி போன். பதறிப்போய் எடுத்தேன். ‘’சார் டாக்ஸி… அட்ரஸ் சொல்லுங்க சார்.”
“ஒரு நிமிஷம்பா” கை விரிக்க முடியும் தூரத்தில் போனை வைத்துக்கொண்டு, ‘டாக்ஸி’ என்றான் ரகசிய குரலில்.
காஞ்சிபுரம் போவதா, வேண்டாமா என ஒரு நொடி அவகாசத்தில் யோசிக்க வேண்டியிருந்தது.
சிந்து, ‘’வேண்டாம்னு சொல்லிடுங்க” என்றாள் மகளைப் பார்த்தபடி. அவள்தான் அங்கே பட்டுப் பாவாடை சட்டை எடுக்க வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருந்தார்கள்.

‘’காஞ்சிபுரம் ப்ரோகிராம் கேன்சல் ஆகிடுச்சுப்பா” என்று போனில் சொன்னது குடும்பத்துக்கும் சேர்த்துத்தான். டாக்ஸி ————– பதிலுக்குக் காத்திருக்காமல் சட்டென சிவப்பு பட்டனை அழுத்தினான். கேக் யாரும் சாப்பிடாமல் அப்படியே கிடப்பதைப் பார்த்து, சிந்து ஆளுக்குக் கொஞ்சமாக மூன்று தட்டுகளில் வெட்டிக் கொடுத்தாள்.
நான் மறுபடி எம்.டி-க்கு போன் போட்டேன். முழுதாக ‘ரிங்’ போனது. அவர் எடுக்கவே இல்லை. கோபத்தில் இருப்பாரோ? அல்லது போனை வைத்துவிட்டுக் குளிக்கப் போயிருப்பாரோ போனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.
பத்து நிமிடங்கள் காத்திருந்தும் போன் வரவில்லை.
இன்னொரு முறை போன் போடலாமா? ஒருவேளை முக்கியமான வி.ஐ.பி-யோடு பேசிக்கொண்டிருந்தால்..? நச்சு நச்சென்று போன் செய்து இம்சை செய்த கோபமும் அல்லவா சேர்ந்துகொள்ளும்? ஒரு நாள் காலைப்பொழுது இப்படியா எம்.டி-யைக் கோபப்படுத்தும்விதமாக ஆரம்பிக்க வேண்டும். கேக்-கைப் பார்த்தால் ஆத்திரமாக வந்தது. அந்த நேரம் பார்த்தா அது வாய்க்குள் இருக்க வேண்டும்? எம்.டி. வி.ஐ.பி-யிடம் பேசிவிட்டு மீண்டும் பேசுவார் எனத் தெரியவில்லை. அந்த வி.ஐ.பி. யாராக இருக்கும்? பிசினஸ் விஷயமாக யாராவது வந்திருக்கலாம். அவருடைய மகளின் கல்யாண விசயமாகக் கூட இருக்கலாம். அதை எல்லாம் ஆம் ஏன் யூகிக்க வேண்டும் என இருந்தது.
“போன் பண்ணினா என்னன்னு திரும்ப கேட்க மாட்டியா?” என்று கேட்டுவிட்டால்?
பதினைந்து நிமிட இடைவெளியில் மீண்டும் அவருக்கு போன் செய்தேன். இந்த முறையும் முழு ரிங் போனது. அவர் எடுக்கவே இல்லை. நிச்சயமாக மினிஸ்டர் வீட்டில்தான் இருக்கிறார். தொடர்ந்து போன் செய்தது தப்புதான். இன்றைக்கு செம கச்சேரி இருக்கிறது என லேசாக நடுக்கமாக இருந்தது. முதல் கோணல் முற்றும் கோணல். முதலிலேயே எடுத்துவிட்டிருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் போயிருக்கும்.
“எதற்கு கூப்பிட்டார்து தெரியலையே?” எதற்கும் ஆபீஸுக்கு ஒரு தடை போயிட்டு வந்துருவா”
“சரி போயிட்டு வாங்க.”
உடனே நான் ஹெல்மெட்டை எடுப்பேன் என சிந்துவோ, மகனோ நினைக்கவில்லை. எனக்காக சர்க்கரை பொங்கலும் பாயசமும் தயாராகிக் கொண்டிருந்தது.
‘‘பத்து நிமிஷம் இருங்க. கொஞ்சம் சாப்பிட்டுட்டு கிளம்பிடுங்க” என்றாள் சிந்து. சில்லென்ற நீரால் முகத்தைத் துடைத்தேன். பசியே இல்லை. ‘’இன்னும் பத்து நிமிஷம் ஆகுமா?” என்றேன் சம்பந்தம் இல்லாமல். ‘’அதுக்குள்ள ஆபிஸுக்கு போய் என்னன்னு பார்த்துட்டு வந்திட்றேன்.”
“பத்து நிமிஷத்தில எப்படி ஆபீஸுக்கு போய்ட்டு வர முடியும்?… கொஞ்சம் இருங்க.”
சிந்துவின் ஆலோசனைகளைக் கேட்டால், வேலை பறிபோவது நிச்சயம் என மூளைக்குள் பெல் அடித்தது.
“இல்லை… இல்லை… பசியே இல்லை… நான் இதோ இப்ப வந்துருவேன்.” வேகமாக ஹெல்மெட்டை மாட்டினேன்.. இனி யாரும் என்னைத் தடுக்க முடியாது என்பது போல பைக்கை உதைத்து கிளம்பினேன். ரிசர் வியூ கண்ணாடியில் மூன்று சோக முகங்கள் தெரிந்தன.
ஆபீஸில் போய் வண்டியை நிறுத்தியபோது, அங்கே எம்.டி-யின் கார் கண்ணில் படவில்லை. இன்னும் வரவில்லையா?… வந்து போய்விட்டாரா?
மேனேஜர் ரூம் வழக்கத்தை விட பரபரப்பாக இருந்தது. யாரையும் அருகே அணுகாத தீ காய்வார் முகம் அவருக்கு. ‘’ஏன் லேட்டு?” என்றார்.
“இன்னைக்கு லீவு சார்?”
“பின்ன ஏன் வந்தே?”
“எம்.டி. கூப்பிட்டாரு. போனை எடுக்கறதுக்குள்ள கட் ஆகிடுச்சு. என்னன்னு தெரியலை. அதான் நேர்ல வந்துட்டேன்.”
“அப்படியா?… சுரேஷ் கிட்ட கேட்டுப்பாரு. அவன்தான் கொஞ்சம் முன்னாடி உன்னைத் தேடிகிட்டு இருந்தான்.”
தேடிக்கிட்டு இருந்தாரா? செத்தேன். சுரேஷ், எம்டியின் பி.ஏ. அவரும் அறையில் இல்லை. அதிகாரிகளின் உதவியாளர்களும் அதிகாரிகள்தான். அவர்களும் மிரட்டுவார்கள். அவர்களுக்காகவும் காத்திருக்கத்தான் வேண்டும். சிந்து போன் செய்தாள். எம்.டி. வெளியில் போயிருக்கிற விஷயத்தைச் சொன்னேன். அவளுக்கு, கொஞ்சம் சர்க்கரை பொங்கலாவது சாப்பிட்டு விட்டுப் போகக் கூடாதா என்பதைத் தவிர வேறு இமாலய கோரிக்கை எதுவும் இருக்கவில்லை. ‘‘சுரேஷ் சார் வந்துட்டாரு. அப்புறம் கூப்புடுறேன்.”
சுரேஷ், ‘‘எதற்காக கூப்பிட்டார்னு தெரியலையே” என்று மட்டும் சொன்னார். பி.ஏ-வுக்கே தெரியவில்லை என்றால் அது சாதாரண விஷயமாகத்தான் இருக்கும் என நினைத்தேன். பி.ஏ-வுக்கே தெரியவில்லை என்றால் அது அதிமுக்கிய ரகசியமாகவும் இருக்கலாம்தானே?
எங்கே போயிருக்கார் என விசாரிப்பது அதிகப்பிரசங்கித்தனம். எப்ப வருவார் என்பதும்தான். மனிதர்கள் மிக சாதாரணமாகப் பேசிக்கொள்வது எல்லாம் முதலாளிகள் விஷயத்தில் ஆபத்தானவை ஆகிவிடுகின்றன.
“எம்.டி. காலையிலியே வந்துட்டுப் போய்ட்டாரா?” என்றேன்.
“இப்ப வர்றேன்னு போனாரு. அவருக்காகத்தான் வெயிட்டிங்” இது சுரேஷ் கேரட் துண்டுகள் சாப்பிடும் நேரம். சாப்பிட ஆரம்பித்தான். எனக்கும் டேபிள், சேர் இருக்கிறது என்பதற்காக நான் இதெல்லாம் சாப்பிட முடியாது.
வெளியே வந்தேன். எம்.டி. கொஞ்ச நேரத்தில் வந்துடுவார்னு சொல்றாங்க. என்னன்னு கேட்டுட்டு வந்துட்றேன் முடிஞ்சா காஞ்சிபுரம் போயிட்டு வந்துடலாம்” சிந்துவிடம் சொன்னேன்.
“எம்.டி. வந்தா என்ன வேலை வைப்பாரோ? வந்து சாப்பிட்டு போயிடுங்க” என்றாள்.
மத்தியானம் வரை எம்.டி. வரவில்லை. அவர் போனில் வந்தால், என்னை எதற்காக அழைத்தார் எனக் கேட்டு வைக்குமாறு மேனேஜரிடமும் சுரேஷிடமும் சொல்லி வைத்தேன். என் முழு பிறந்த நாளும் லீவு எடுத்திருந்தும் கூட ஆபிஸிலேயே முடிந்துவிட்டது.
மாலை ஏழு மணிக்கு, ‘சார் க்ளப்புக்கு போய் விட்டாராம்” என்று சொல்லி விட்டு மேனேஜரும் கிளம்பிப் போய்விட்டார்.
எனக்கு ஆபிஸைவிட்டுக் கிளம்பத் தயக்கமாக இருந்தது. எம்.டி. எந்த நேரத்திலும் என்னை எதிர்பார்த்து ஆபிஸுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது? பொழுதெல்லாம் எனக்காக அவர் காத்திருந்திருக்கக் கூடும். சே… எனக்காக அவர் காத்திருந்தார் என நினைப்பதே தவறு. தமிழில் வேறு எப்படி சொல்வது? பொழுதெல்லாம் எனக்கு ஒரு வேலை கொடுப்பதற்கு எண்ணி அதை ஒப்படைக்க முடியாமல் தவித்திருக்கலாம். ஆபிஸ் வாசலில் டீக்கடை. பிறந்தநாளில் ஒன்றுமே சாப்பிடாதது நினைவு வந்தது. வெளியே வந்து குமார் கடையில் ஒரு டீயும் பஜ்ஜியும் சாப்பிட்டேன். இனி ஆபிஸில் இருந்து பிரயோஜனம் இல்லை. ஹெல்மெட்டை மாட்டி, பைக்கை எடுக்க இருந்த நேரத்தில் செல்போன் அடித்தது.
எம்.டி.!
‘‘சார் வணக்கம் சார்!”
“என்னப்பா நாலைஞ்சு முறை கூப்பிட்டுருந்தியே?”
“இல்ல சார்… வந்து காலையில நீங்க எனக்கு போன் பண்ணீங்க. எடுக்கறதுக்குள்ளே கட் ஆகிடுச்சு. அதான் என்னன்னு கேட்கலாம்னு பண்ணேன் சார்!”
”எதுக்கு பண்ணேன்னு ஞாபகம் இல்லையேப்பா!… எத்தனை மணிக்கு பண்ணேன்?”
”சார்… காலையில ஒரு எட்டு… எட்டரை இருக்கும்..”
”ம்ம்ம்ம்… சரி… ஓ.கே. நோ ப்ராப்ளம்…”
எம்.டி. போனை வைக்கவில்லை. அல்லது அணைக்காமல் அப்படியே விட்டுவிட்டாரா எனத் தெரியவில்லை. திடீரென நினைவுக்கு வந்து ஏதாவது சொல்வாரா என போனை கண்ணுக்கும் காதுக்குமாக மாற்றி மாற்றி வைத்தேன். ‘‘காலைல ஆபீஸ்ல கேட்டப்ப நீ லீவ்ல இருக்கறதா சொன்னாங்களே?… என்ன உடம்புக்கு?’’ என்றார்.
‘‘உடம்புக்கு ஒண்ணும் இல்ல சார். இன்னிக்கு எனக்கு பிறந்தநாள்.’’
‘‘ஓ… ஹாப்பி பர்த் டே’’ ஆச்சர்யம் தொனிக்கும் சிரிப்புச் சத்தம்.
‘‘தாங்க் யூ சார்!’’
”யா… ஐ காட் இட். காலைல அதைச் சொல்லத்தான் போன் பண்ணேம்பா.”
எம்.டி. போனை அணைத்துவிட்டார்.
ஹேப்பி பர்த் டே என அவர் உச்சரித்தமாதிரியே உச்சரிக்க முயற்சி செய்தேன். முடியவில்லை.

(நன்றி: ஆனந்த விகடன் தீபாவளி மலர்- 2016)

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *