பிறந்தநாள்- சிறுகதை
Tamil Magan / October 21, 2016

  தமிழ்மகன் சிந்து எனக்கு கேக் ஊட்டிய நேரத்தில் செல்போன் அடித்தது. மகனும், மகளும் இன்னமும் ‘ஹாப்பி பர்த் டே டாடி’ பாடிக் கொண்டிருந்தார்கள். கேக்கை விழுங்கிவிட்டு செல்போனை எடுக்கலாம் என நினைத்தேன் அதுதான் இமாலய தவறு. செல்போனில் அழைத்தது எம்.டி. வாயைத் துடைத்துக்கொண்டு போனை எடுப்பதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. எம்.டி. தேவையில்லாமல் அழைக்க மாட்டார். மிக அவசரமான வேலையாக இருந்தால்தான் அழைப்பார். நாகரிகமாகத்தான் பேசுவார். ‘உன்னை ஏதும் டிஸ்டர்ப் பண்ணவில்லையே? ஒரு ஹெல்ப் வேணும்’ இப்படித்தான் பேசுவார். ஒருபோதும் எம்.டி. அழைத்து, எடுக்காமல் விட்டதில்லை. எதற்கு அழைத்தாரோ, என்ன அவசரமோ என வேகமாக மனதில் ஓட்டிப் பார்த்தேன். கேக் சாப்பிடுகிற ஆசையில் போனை எடுக்காமல் விட்டுவிட்டோமே? என்ன நினைப்பாரோ என்ற புதிய கேள்வியும் மனத்தில் உதித்தது. உப கேள்விகள் பிறந்து ஏகப்பட்ட கொக்கிகள் நியூரான் எங்கும் நிரம்பி, குப்பென்று வியர்த்தது. உடனே அழைத்தேன். போன் எங்கேஜ்டாக இருந்தது. மறுபடி நம்மைத்தான் அழைத்துக் கொண்டிருக்கிறாரோ… அவருக்கும் எங்கேஜ்ட் டோன் வருமே… நாம் அலட்சியமாக வேறு யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதாக நினைத்துவிட்டால்… போனை அப்படியே வைத்துவிட்டுக் காத்திருந்தேன். வியர்வை அதிகமாகிக் கொண்டிருந்தது. என் மனைவி சிந்து கிராமத்துப் பெண். என்னை சார்ந்தே யோசித்துப் பழக்கப்பட்டுப் போனவள். கணவனுடைய அதிர்ச்சியோ, பாமோ அவளை உடனடியாகப் பாதித்துவிடும். நான் பயப்படும் அளவுக்கு சற்று கூடுதலாகவே பயப்படுவாள். ‘ஊருக்கே போய்விடலாங்க’ என்கிற அளவுக்குப் போய்விடுவாள். ஆனால், நான் மகிழ்கிற அளவுக்கு மகிழ்கிற பழக்கம் அவளுக்கு இல்லை. பெரியவனுக்கு அம்மா குணம்தான், அவனும் அப்பா மீண்டும் இயல்பு நிலைக்கு மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தான். சின்னவளுக்கு இன்னமும் யாருடைய குணம் என்பதை அத்தனை ‘சுகுராக’ வரையறுக்க முடியவில்லை. ஒட்டு மொத்தக் குடும்பமும் இப்போது எம்.டி. எதற்காக அழைத்தார் என்ற குழப்பத்தில் இருந்தது. ‘‘ஏம்பா போன் பண்ணா எடுக்கமாட்டியா?” என கொஞ்சம் டோஸ்விட்டு விட்டு வைத்து விட்டாலும் போதும் என்றிருந்தது. பேசாமல்…

பாஸ்வேர்டு
Tamil Magan / October 2, 2016

பாஸ்வேர்டு நட்டநடு சாலையின் மஞ்சள் கோட்டில் அவனும் அவளும் நின்றிருந்தனர். அவர்களுக்கு முன்னும் பின்னும் கொக்கியில் மாட்டிய ரயில்பெட்டிகள் போல வாகனங்கள் தொடர்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தன. ஐந்து நிமிடங்களுக்கு மேலாக சாலையைக் கடக்க வழிகிடைக்காமல் நின்றிருந்தனர். அது சாலையைக் கடப்பதற்கான தடம் அல்ல. வாகனங்களுக்கு இடையே அரிதாக இடைவெளி விழும்போது, தற்கொலை முயற்சி போல பாய்ந்து சென்று சாலையைக் கடந்துவிட வேண்டும். ஆனால், இடையில் வெளியே இல்லாத வாகனச் சுவர். சற்று தூரத்தில் சிக்னல் இயந்திரம் இருந்தது; ஆனால் அது வேலை செய்யவில்லை; போக்குவரத்து போலீஸாரும் இல்லை. இரண்டு பேருக்குப் பரிதாபப்பட்டு வாகனங்கள் நிற்பதாகவும் இல்லை.  ஒருவரை ஒருவரை ஒருவர் வழித்துணைபோல பார்த்துக்கொண்ட அந்தத் தருணத்தில்தான் அவர்களுக்குள் பார்வை அறிமுகம் நிகழ்ந்தது. “சிட்டி பேங்க் நான்கு மணி வரைக்கும்தானே?’’ என அவள் கேட்டபோதுதான் அவனும் ஒரு புன்னகையோடு தயார் ஆனான். அவளும் புன்னகைத்தாள். அவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “இன்னும் அஞ்சு நிமிஷம்தான் இருக்கு. இன்னைக்கு லாஸ்ட் நாள் வேற’’ என்றான். அந்த வாகனத்  திரளில் மனிதர்கள் இருவர் பேசுவதற்கான சூழ்நிலை இயல்பாகவே உருவாகியது. உடனடியாக அவள் ஒரு காரியம் செய்தாள். அவளுடைய கைப்பையில் இருந்து செல்போனை எடுத்தாள். வேகமாக சில பட்டன்களை அழுத்தினாள். பொறுமை இன்றி காத்திருந்தாள். அவள் முகத்தில் புன்னை மலர்ந்தது. “ஆன்லைன்லயே கட்டிட்டேன்.’’ செல்போன் குறுஞ்செய்தியைப் பார்த்தபடி, பொதுவாக சொன்னாள். ஆனால், அதைக் கேட்பதற்கு அங்கு அவன் ஒருவன் மட்டும்தான் இருந்தான். அவள் முடிவெடுத்த வேகம், தொழில்நுட்பத்தை சட்டென பிரயோகித்த திறமை, விழிகளைச் சுழற்றியபடி சொன்ன பாணி… எதனாலோ அவனுக்கு அவளைப் பிடித்துப்போனது. அவள் மஞ்சள் நிறப் புடவை கட்டியிருந்தாள். அதே நிறத்தின் சகோதர வேறுபாடுதான் அவளுடைய நிறம். அவ்வளவு மலர்ச்சியான விழிகள். கேமிரா படம் எடுப்பதுபோல் அதன் இமைகள் மெல்ல மூடித் திறந்தன. சுருள் சுருளான கருப்பான தலைமுடி, வாகன ஓட்டத்துக்கு ஏற்ப காற்றில் அலைபாய்ந்தது. மஞ்சள் நகப்பூச்சு. நீளமான விரல்கள்….