Description
டாக்டர் எஸ்.கார்த்திகேயன்
பணம் சம்பாதிக்க எல்லோருக்கும் ஆசை! சம்பாதிப்பதில் உள்ள -ஆபத்துக்குத்தான் பயப்படுகிறார்கள். ஆபத்துக்கும் ரிஸ்க்குக்கும் உள்ள வித்தியாசம் இந்தப் புத்தகத்தில் அருமையாக விளக்கப் பட்டிருக்கிறது. ரிஸ்க் என்பது என்ன என்று தெரியாமலேயே ஒரு விஷயத்தில் புகுந்தால் அது ‘ரிஸ்க்’ அல்ல; ஆபத்து. இதைத் தமிழில் அருமையாக ‘ஆழம் தெரியாமல் காலை விடுவது ஆபத்து’ என்று சொல்லி இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் ‘ரிஸ்க்’குக்கு ஓர் அருமையான விளக்கம் இருக்கிறது. ரிஸ்க் என்பதை நம்மில் பலர் ஆபத்து என்றே தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். துருவ, வெள்ளைக் கரடிகள் பனிப் பாளத்தின் மேலே பக்குவமாக நடந்து செல்லும். திடீரென்று தயங்கி வளைந்து செல்லும். அங்கே செல்பவர்கள் அது எங்கெங்கே காலை வைக்குமோ அந்தத் தடத்திலேயே காலை வைத்துச் செல்வார்கள். அந்த இடத்தில் எல்லாம் கரடியின் எடையைப் பனிப் பாளம் தாங்கும். மற்ற இடத்தில் காலை வைத்தால் ஒல்லியான மனிதனுடையை எடையைக்கூட பாளம் தாங்காமல் நொறுங்கிவிடும். வாழ்க்கையில் ஒரேயடியாக ரிஸ்க் எடுக்காமலிருந்தாலும் முன்னேற முடியாது. கண் மண் தெரியாமல் ஆபத்தை விலை கொடுத்தும் வாங்கக் கூடாது. அன்றாட வாழ்க்கையிலேயே நாம் குறைந்த பட்ச ரிஸ்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். இயற்கையே குறைந்தபட்ச ரிஸ்குக்கு நம்மை தண்டிப்பதில்லை. ரிஸ்க் எடுக்காமல் இருந்தாலும், அதிக பட்ச ரிஸ்க் எடுத்தாலும் தண்டிக்கிறது. ரிஸ்கைப் பற்றித் தெரிந்துகொண்டாலே நம் மன நிலை முன்னேற்றத்துக்குப் பாதி தயாராகிவிடும். இந்த சூட்சுமம் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. ‘மிதமிஞ்சிய ரிஸ்க் எடுக்காமல் அளவான ரிஸ்க் எடுத்து பணத்தை அள்ளுவது எப்படி? அளவான ரிஸ்க் எடுத்தால் நிச்சயம் பணம் எப்படி வருகிறது? ரிஸ்கை எப்படி அளப்பது? பணம் சம்பாதிப்பதற்கான மன நிலை எப்படித் தானாகவே அமைகிறது? சில சமயங்களில் அதற்கேற்ற மன நிலையை எப்படி வளர்த்துக்கொள்வது?’ ஆகிய பணம் சம்பாதிப்பதற்கான பல முக்கிய விஷயங்களை அக்கறையுடன் விவரித்துள்ளார் நூல் ஆசிரியர். இனி பணம் உங்கள் கையில் அடங்கியிருக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை!
ரூ.160/-
Reviews
There are no reviews yet.